politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

23.1.12

கூடங்குளம் to கொவ்வாடா

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைய உள்ள கொவ்வாடா அணு உலைக்கு ஆரம்பத்திலேயே எதிர்க்க ஆரம்பித்து உள்ளார்கள் அந்த பகுதி விவசாயிகளும் மீனவர்களும்....

இது அமெரிக்க அரசின் உதவியுடன் நிறுவப் படும் அணு உலை என்பதால் நமது பிரதமர் கண்டிப்பாக எப்பாடு பட்டாவது இதை நிறுவ பாடு படுவார்...

சுமார் ஒரு லட்சம் கோடி செலவில் கட்டப் படும் இந்த அணு உலையானது எப்பொழுது செயல் படத் தொடங்கும் என்று தெரியவில்லை...

கூடங்குளம் பற்ற வைத்த புரட்சி தீ நாடு முழுவதும் அணு உலைகளை நிறுவவதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை...

கூடங்குளம் அணு உலை திறக்கப் பட்டால் மின்சாரப் பற்றாக்குறையே இருக்காது என்று கூறுபவர்கள், கூடங்குளம் அணு உலையில் வேலை செய்யும் தொழிலாளிகளை வைத்து சங்கம் அமைத்து ஆட்சியை பிடிக்க கனவு காண்பவர்கள் எவ்வளவு சுய நல வாதிகள் என்பதை இந்த உலகம் கண்டு கொண்டது என்பது மட்டும் உண்மை...


[மார்ச் மாதம் இறுதி வாரம் வரை வேலை பளு இருப்பதால் பதிவு எழுத முடியவில்லை... பிறர் வலைப் பூக்களுக்கும் வர முடியவில்லை... மன்னிக்கவும்... எதையாவது எழுது என்று தூண்டிய சூனிய விகடன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..]

கூடங்குளம் போராட்ட பூமியில் இருந்து நேரடி அனுபவத்தை தொகுக்கும் தோழர்.ரெவெரியின் பதிவை படிக்க...

ராஜபாட்டை ராஜா அவர்களின் கேள்விக்கு கீழ் உள்ள சுட்டியில் பதில் உள்ளது, பார்த்துக் கொள்ளவும்...

7.1.12

மருத்துவ வியாபாரம்

சென்ற பதிவில் மருத்துவர்கள் நடத்தும் போராட்டத்தை விமர்சித்ததற்கு ஒரு மருத்துவ தோழர், தவறான தகவல்களை அளிப்பதாக தெரிவித்துள்ளார்...

என் வலைப்பூவில் மருத்துவம் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் எந்த வியாதிகளுக்கும் நல்ல மருத்துவர்களை சென்று பார்ப்பது தான் ஒரே வழி என்று பல இடங்களில் நான் கூறி இருப்பேன்..

எட்டு ஆண்டுகள் நான் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துள்ளேன்... சுமார் ஆயிரம் மருத்துவர்களை சந்தித்துள்ளேன்... அதில் என்னால் நூறு மருத்துவர்களை மட்டுமே மிகவும் சிறந்த மருத்துவர்கள் என்று கூற முடியும்...

காஞ்சிபுரம் சார்ந்த வெங்குடி மருத்துவமனையை சார்ந்த மரு.ரிஷிகேஷ் அவர்கள் என்றும் என் பட்டியலில் முதலிடத்தில் இருப்பார்...

ஆனால் பல மருத்துவர்களுக்கு அலட்சியம் என்பது உடன் பிறந்தது என்பது போல் நடந்து கொள்கிறார்கள். சினிமா விலும் ஊடகங்களிலும் கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்லப் பட்டாலும்... அவர்கள் கூறுவதில் பத்து சதவிகித உண்மை எப்பொழுதும் இருக்கும்...

மருத்துவர்களின் சுரண்டல்களை குறித்து புரிந்து கொள்ள நான் எதுவும் தனியாக எழுதி தெரிய வேண்டும் என்று இல்லை... ஏற்கனவே விகடனில் தொடராக வந்த போஸ்ட் மோர்டேம் என்ற புத்தகம் இன்றும் விகடன் பிரசுரத்தால் தனி புத்தகமாகவே கிடைக்கும்... இதை எழுதியவர் ஒரு மருத்துவர் என்பதால் பலர் இதை பற்றி எந்த கருத்தும் சொல்ல மாட்டார்கள்... ஆனால் ஊடங்கங்கள் பொறுப்பாக நடந்து கொள்வதில்லை என்று மட்டும் குறை கூறுவார்கள்.. பொறுப்பான ஊடகமாக செயல் படும் எத்தனையோ வலைபூக்களில் வெளி வருவது எல்லாமே மிகைப் படுத்தப் பட்ட செய்திகள் அல்ல... மாறாக உண்மைகளே இங்கு பதியப் படுகிறது...

இப்பொழுதும் கூறுகிறேன்,
தவறான சிகிச்சை முறையால் ஒரு உயிர் இழந்ததற்கு அந்த மருத்துவரை கொலை செய்வது மட்டுமே நீதியாகாது... ஆனால் நம் நாட்டு சட்ட திட்டங்கள் தவறான சிகிச்சை புரியும் மருத்துவர்களுக்கு எந்த வித தண்டனையும் வழங்குவதில்லை...

அதே சமயம் ஒவ்வொரு மருத்துவருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோருவதை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது... உண்மையில் இது சாத்தியமா? ஏற்கனவே மருத்துவமனை கண்ணாடி உடைப்பதற்கும், மருத்துவமனையில் கலாட்டா செய்வதற்கும்  கடுமையான தண்டனைகள் சட்டத்தில் இருக்கும் பொழுது, மருத்துவர்கள் எதிர்பார்ப்பது என்ன? ஒவ்வொரு மருத்துவமனைக்கும் காவல்துறை பாதுகாப்பா?

உங்கள் போராட்டத்தால் சிகிச்சை கிடைக்காமல் ஒரு கர்ப்பிணி பெண் இறந்து போனதற்கு மருத்துவர்களிடம் ஏதாவது வருத்தம் உள்ளதா? கண்டிப்பாக இல்லை...

தமிழ் நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் கூறுகிறார், கொலை செய்யப் பட்ட மருத்துவர் எந்த விதத்திலும் சட்டத்தை மீறவில்லை என்று... உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன்....

MBBS படித்த மருத்துவர்கள் சிறு அறுவை சிகிச்சை செய்யவே பயிற்சி அளிக்கப் பட்டுள்ளார்கள். அப்படி இருக்கும் பொழுது ஒரு ஆபத்தான நிலைமைக்கு சென்று கொண்டிருந்த ஒரு நோயாளியை அந்த மருத்துவர் காப்பாற்ற முயற்ச்சிக்கிறேன் என்ற வகையில் செய்து இருக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான்... அது இன்னும் சிறந்த உபகரணங்களும், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களும் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதே ஆகும்... அதை செய்யாதது அந்த மருத்துவரின் அலட்சியம் மட்டும் அல்ல, பெரிய அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுத்தது சட்டத்திற்கு புறம்பான செயல் அல்லவா?

ஒரு அரசு மருத்துவராக பணி புரியும் ஒருவர் வெளியில் எந்த வித மருத்துவமனையிலும் பணி புரிய கூடாது என்றும் தனியாக கிளினிக் நடத்தக் கூடாது என்பது சட்டம். அந்த சட்டத்தை மதிக்காமல் நடந்து கொண்டது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பது மட்டும் அல்ல, சட்டம் ஒன்றும் செய்யாது என்ற அலட்சியமும் தெரிகிறது அல்லவா?

உண்மைகள் வெளியில் தெரியவில்லை என்று மாற்றுக் கருத்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்...
மருத்துவரை கொலை செய்தது காட்டு மிராண்டி தனமானது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்..
மேலும் ஒரு மருத்துவர், இறந்த மருத்துவர் DGO  படித்தவர் என்ற தவறான தகவலை கொடுத்து உள்ளார்...

முதன் முதலில் உண்மைகள் வெளியில் தெரியவில்லை... வேலை நிறுத்தத்தை ஆதரித்த மருத்துவர்கள் சட்டத்திற்கு புறம்பாக அந்த மருத்துவர் செய்த செயல்களை வெளியில் தெரிவிக்காமல் தங்கள் பாதுகாப்புக்கு வழி தேடினார்கள்... ஆனால் இப்பொழுது தெரிகிறது...

மருத்துவரை கொலை செய்தது காட்டு மிராண்டி தனமானது என்று ஏற்றுக் கொள்கிறேன்...
ஆனால் ஒரு மருத்துவரின் அலட்சியப் போக்கால் ஒரு நோயாளி இறந்தால் அதுவும் காட்டு மிராண்டி தனமானது தான்..

மருத்துவர்களும் மனிதர்கள் தானே என்ற வாதமும் வைக்கப் படுகிறது,
மருத்துவர்களும் மனிதர்களே அவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் வரை...

பணத்திற்கு மனசாட்சியை அடகு வைப்பவர்களை நான் மருத்துவர்கள் என்ற வரையறைக்குள் வைப்பதில்லை மாறாக அவர்களுக்கு வேறு பெயர் உள்ளது

அது வியாபாரி ....

http://imaapstate.blogspot.com/2010/12/can-mbbs-doctor-do-surgery.html

http://blogs.emedinews.in/?p=1477

இறந்த நோயாளி ரத்த உறைவு தன்மை குறையும் தன்மை உள்ள HELLP  SYNDROME  நோய்க்கு ஆட்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. அந்த நோயை குறித்து தெரிந்து கொள்ளவும், கீழே ஒரு சுட்டியை அளிக்கிறேன்...
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000890.htm

5.1.12

போராட்டங்களை கொச்சைப் படுத்தும் போராட்டம்

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் என்பது ஏனைய மக்களின் போராட்டங்களை கொச்சைப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது...

ஒரு மருத்துவர் கொலை செய்யப் பட்டது வருத்தம் தரும் விஷயமாக இருந்தாலும், நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும் வேலை நிறுத்தம் எந்த வகையிலும் தீர்வு ஆகாது...

இலவசமாக அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முடியும் பொழுது ஒவ்வொரு அரசு மருத்துவரும் தனியாக மாலை நேரங்களிலும், பலர் அரசு வேலை நேரங்களிலும் தனியாராக இயங்கி மக்களிடம் இருந்து பணம் சுருட்டுவது இயல்பாகவே உள்ளது...

அரசு மருத்துவர்கள் வெளியில் தனியாராக வேலை செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தும், அரசும் அரசு மருத்துவர்களும் ஒருவொருக்கொருவர் காப்பாற்றும் முயற்ச்சியில் இந்த சட்டத்தின் கண்கள் கருப்பு துணியால் கட்டப் பட்டு குருடாக்கப் படுகிறது...

ஒவ்வொரு ஊழியரும் வேலை நிறுத்தம் என்பதை கடைசி ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர்...

ஒவ்வொரு வேலை நிறுத்த நாளும் ஒரு நாள் சம்பளத்தை தியாகம் செய்வதால், வேலை நிறுத்தம் என்பதற்கு ஒரு மரியாதை இருந்தது...

இந்தியாவிலேயே மிகவும் குறைந்த சம்பளம் வாங்கும் தமிழக அரசு மருத்துவர்கள், ஒரு நாள் சம்பளம் போனால் போகட்டும் மாலையில் எங்கள் கிளினிக் தரும் வருமானத்திற்கு ஈடாகுமா என்ற எண்ணம் தான் இந்த போராட்டத்தின் மூலம் தெரிய வருகிறது...

தாங்கள் சார்ந்த சங்கத்தின் கோபத்தினை ஏற்றுக் கொள்ள விரும்பாத சில மருத்துவர்கள் வேண்டா வெறுப்பாக கலந்து கொண்டதை எண்ணிப் பார்த்தாலும், இதை கூட எதிர்க்க முடியாமல் நீங்கள் என்ன சம்பாதித்துக் கிழித்து விடப் போகிறீர்கள் என்று தான் கோபம் வருகிறது...

மருத்துவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்தாலே போதும், எந்த அசம்பாவிதமும் நடக்காது..

மருத்துவர்களின் அலட்சிய போக்கு நோயாளியின் உயிரை எடுத்துக் கொண்டிருந்த காலம் போய், அதுவே ஒரு மருத்துவரின் உயிரையும் பறித்திருக்கிறது என்பதை உணர்ந்து இனியாவது மருத்துவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்களா?

1.1.12

தானே

தானே புயலின் கொடூரத்தை காண கீழே சுட்டவும்...
The Hindu : States / Tamil Nadu : Cyclone Thane: the aftermath

தானே புயலின் சீற்றத்தை தமிழகம் கண்டது, இந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தை பல இடங்களில் தடை செய்து இருக்கிறது...

கடலூர் மாவட்டத்தில் மின்சாரமும், தொலைத்தொடர்பும் துண்டிக்கப் பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்...

பால் விநியோகம் தடை பட்டதை அடுத்து பொருளாதார நிபுணர்கள் கூற்று [demand fix the price] எவ்வளவு அசிங்கமானது என்பது போல், ஒரு லிட்டர் பால் ஐம்பது ரூபாய்க்கு விற்கப் படுகிறது...

சுனாமியை விட கொடுமையானதாக இருந்ததாக வீடிழந்த மீனவ மக்கள் பயத்துடன் நினைவு கூறுகிறார்கள்...

இதன் அடிப்படையில், இயற்க்கை சீற்றம் குறித்து நம் பார்வை மாற வேண்டும்..

ஐந்து நாட்கள் முன்னதாக புகுஷிமா விபத்து நடந்ததை விசாரித்த குழுவினர், தங்கள் அறிக்கையில், இவ்வாறு தெரிவித்து உள்ளனர்..

சுனாமியில் உருவாக்கப் பட்ட அலைகள் இருபது அடிக்கு மேல் வராது என்ற யூகத்தில் தடுப்பு சுவர் எழுப்பியதால் இந்த விபத்து நடந்ததாக கூறி உள்ளனர். கற்பனைக்கு எட்டாத வகையில் இயற்க்கை சீற்றம் இருந்ததாகவும்... இனி வரும் காலங்களில் கற்பனைக்கு எட்டாத வகையில் கற்பனை செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் பாடம் கற்றுக் கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது...

அணு உலை விவகாரத்தில் எத்தனையோ இயற்க்கை சீற்றங்கள் குறித்து எழும் அச்சத்தை புறந்தள்ளும் அணு உலை ஆதரவாளர்கள், புயல் சீற்றத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும்.

ஆங்கில புத்தாண்டு புதிய கோணத்தில் பிரச்சினைகளை சந்திக்க நமக்கு கற்றுத் தரட்டும்...